குரு கவசம் | Guru Kavasam | தக்ஷிணாமூர்த்தி கவசம் | Dakshinamurthy Kavasam

குரு கவசம்


தென் திசை நோக்கிய தெய்வம் நீயே
தென்னாடுடைய சிவனும் நீயே
மண்ணுயிர்க் காக்கும் மாதேஸ்வரனே
மலரடி பணிந்தோம் அருள் புரிவாயே

சந்திரன் தலையில் சூடிய குருவே
சாந்த சொரூபம் உந்தன் வடிவே
நன்மைகள் பலவும் நாளும் செய்யும்
நல்லோன் நீயே நலம் தருவாயே

புன்னகை தவழும் பொன்னன் நீயே
புலித்தோல் இடையில் அணிந்தவன் நீயே
கண்ணிமை போலே காப்பவன் நீயே
கை தொழுதோமே குருவே சரணம்

உன்னடி பணிந்தால் உயர்வுகள் சேரும்
ஊழ்வினை துன்பம் துயரம் தீரும்
எண்ணில் அடங்கா இன்பங்கள் கூடும்
ஈரேழ் உலகம் உன்புகழ் பாடும்

சிவனுருவான குருபகவானே
ப்ரகஸ்பதியென்னும் பெயருடையோனே
புவனம் காக்கும் புண்ணியன் நீயே 
புகழும் நிதியும் தருபவன் நீயே

தாராதேவி சங்கினி என்று
தேவியர் இருவரை மணந்தவன் நீயே
மாறா கருணை கொண்டவன் நீயே
மஞ்சளில் ஆடை தரித்தவன் நீயே

தனுசு மீனம் ராசிகள் இரண்டின்
அதிபதி நீயே அருள்புரிவோனே
கனவிலும் நினைவிலும் உன்னடி பணிந்து
கடலென செல்வம் அடைந்திடுவோமே

முல்லை மலரால் உன்னை வணங்கி
முந்தை வினைகளின் வேரருப்போமே
இல்லையென்று சொல்லாமல் நீயும்
எங்களுக்கருளும் ஈசனும் நீயே

வியாழன் தோறும் விரதம் இருந்து
ஆலயம் வந்து குரு உனை பணிவோம்
தியானநிலையில் இருக்கும் உந்தன்
திருவடி வணங்கி பெருமைகள் அடைவோம்

திருமணம் நிகழ திருவருள் புரிவாய்
புத்திர பாக்கியம் இனிதே தருவாய்
வருக வருக குருவே வருக
வழிபடுவோர்க்கு நலம்பல தருக

சாத்விக குணத்தின் பூர்வீகம் நீயே
சரணடைந்தோர்க்கு காவல் நீயே
போற்றிட வந்தோம் உன் திருவடியே
புரிவாய் புரிவாய் கருணை குருவே

தேவர்கள் வணங்கும் குருவும் நீயே
இந்திரலோக மந்திரி நீயே 
பாவங்கள் போக்கும் பகவான் நீயே
பக்தரை காக்கும் ஈசனும் நீயே

கருணை உள்ளம் கொண்டவன் நீயே
மங்களம் அருளும் கோலும் நீயே
வருவோம் உந்தன் சன்னதி நாங்கள்
வாழ்வினில் பூக்கும் வளமை பூக்கள்

இனிப்பை விரும்பி ஏற்பவன் நீயே
பஞ்சபூதத்தில் வானம் நீயே
அழிவில்லாத ஆண்டவன் நீயே
அடைக்களமானோம் உன் திருவடியே

அன்பரை காக்கும் அழகிய இறைவா
ஆற்றல் பதவி அனைத்தும் தருவாய்
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
துணைவரவேண்டும் நிழலென நீயே

தோஷம் உள்ளவர் உன்னடி பணிந்தால்
சேமம் பெருகி சிறப்புடன் வாழ்வார்
வாரம்தோறும் வழிபடும்போது
நேரிடும் இன்னல் நெருங்குவதேது

அரச மரத்தை வளம் வரும் வேளை
அல்லல் நீங்கும் அவதிகள் தீரும்
கொண்டைக் கடலை உனக்கென படைத்து
தானம் கொடுத்தால் தோஷம் நீங்கும்

பாலும் பழமும் பஞ்சாமிர்தமும்
தயிரும் இளநீர் விபூதியாலும்
பகவான் உனக்கு அபிஷேகம் செய்தால்
எல்லா இடரும் நொடியில் விலகும்

பக்தரை உந்தன் பாதம் காக்க
பணிந்தோம் உன்னை குருவே காக்க
தக்ஷிணாமூர்த்தி எங்களை காக்க
திருவடி தொழுதோம் என்றும் காக்க

காக்க காக்க கயிலாயன் காக்க
கருணாமூர்த்தி கனிந்தே காக்க
தீர்க்க தீர்க்க பாவம் தீர்க்க
திருத்தலம் வந்தோம் குரு உனை பார்க்க

இமைகள் இரண்டை இமையோன் காக்க
இதயம் தன்னை ஈஸ்வரன் காக்க
தசையுடன் எலும்பை தயவுடன் காக்க
தாழ்பணிந்தோமே குருவே காக்க

இருள்தனை அகற்றும் ஒளியென காக்க
இரு கைகால்களை இறையோன் காக்க
உருவம் முழுதும் உயர்ந்தோன் காக்க
உள்ளே உறையும் குருவே காக்க

பரிவுடன் உந்தன் பார்வையில் காக்க
பழியில் இருந்து பகவான் காக்க
செறிவுடை தெய்வம் சிறப்புடன் காக்க
சீலமாய் வாழ குருவே காக்க

பிணிகள் இன்றி பெரியோன் காக்க
பிழைகள் பொறுத்து ஆசான் காக்க
இனிப்பினை விரும்பும் ஈசன் காக்க
இணையில்லாத குருவே காக்க

விருப்பும் வெறுப்பும் அண்டாது காக்க
விண்ணும் மண்ணும் செழிப்புற காக்க
திருப்பம் வழங்கும் திருவே காக்க
திசைகள் எட்டும் குருவே காக்க

தனித்தனியாக உறுப்புகள் யாவும்
தடைகள் இன்றி இயங்கிட காக்க
நினைத்தது நடக்க நிர்மலன் காக்க
நெஞ்சினில் வாழும் குருவே காக்க

காக்கும் எங்கள் குருவே வாழ்க
கயிலைமலையோன் சிவனே வாழ்க
பார்க்கும் விழிகளில் பரமன் வாழ்க
பரிவுடன் அருளும் ஈசன் வாழ்க

தீராத பிணிகள் தீர்ப்பவன் வாழ்க
தென்திசை பார்க்கும் குருவே வாழ்க
போராடும் வாழ்வை தடுப்போன் வாழ்க
பொன்னிறத்தோனே தேவா வாழ்க

பூக்கும் மலரின் பொழுதுகள் வாழ்க
புதுப்புனலாக கருணை வாழ்க
யார்க்கும் உதவும் இறைவன் வாழ்க
யாவரும் வணங்கும் குருவே வாழ்க

ருத்ராட்ச மாலை தரித்தவன் வாழ்க
பற்றோடு நினைக்கும் அடியவர் வாழ்க
வரும்வினை போக்கும் குருவே வாழ்க

ஆலயம் தோறும் அமர்ந்தாய் போற்றி
அடியவர் உள்ளம் அறிவாய் போற்றி
போதனைசாலையில் இருப்பாய் போற்றி
புண்ணியவடிவே குருவே போற்றி

ஆடைகள் விற்கும் இடங்களிலெல்லாம்
அய்யா நீயும் வாசம் செய்வாய்
மருத்துவமனையில் வங்கியில் நீயும்
மகிழ்வுடன் இருந்து எங்களை காப்பாய்

மனிதரின் உடம்பில் ஒன்பது துளைகள்
ஒவ்வொருத்துளையும் கோல்யெனவாகும்
கண்கள் இரண்டும் சூரியன் சந்திரன்
காதுகள் இரண்டும் செவ்வாய் புதனாம்

மூக்கின் துளைகள் சுக்கிரன் சனியென
முன்னோர் வகுத்து முறைசெய்தாரே
வாயில் உன்னை வைத்ததனாலே
வளமிகு வார்த்தைகள் வழங்கிடு நீயே

முன்வழித் துளையில் ராகு இருக்க
பின்வழித் துளையில் கேது இருக்க
அங்கம் முழுதும் நவகோலாக
எங்களை மண்ணில் படைத்தவன் நீயே

தலங்கள் தோறும் விதவிதமான
கோலம் தாங்கி தரிசனம் தருவாய்
நலம்பல வேண்டி வருவோர்க்கெல்லாம்
நயமுடனே நீயும் நல்லருள் புரிவாய்

வைத்தீஸ்வரனார் கோவிலில் நீயும்
மேற்கினில் நோக்கி மேன்மைகள் தருவாய்
கஞ்சனூரிலே கீழ்த்திசை பார்த்து
கைத்தொழுவோரை காத்திடுவாயே

திருவொற்றியூரில் வடதிசை பார்த்து
திருவருள் நீயும் புரிகின்றாயே
திருநாவலூரில் நின்ற நிலையிலே
தரிசனம் தந்து அருள்கின்றாயே

காஞ்சியில் நீயும் வீணை மீட்டும்
காட்சியை தந்து கவர்ந்திடுவாயே
ஆந்திர மாநிலம் அனந்தப்பூரிலே
ஐயப்பன் போலே அமர்திருப்பாயே

திருப்புலிவலத்தில் சிங்கத்தின் மீது
திருவடிப் பதித்து வீற்றிருப்பாயே
திருச்செங்கோட்டில் இடக்கால் ஊன்றி
வலக்கால் மடக்கி அருள்புரிவாயே

தஞ்சை கோபுர கீழ்சுவர் தன்னில்
வெண்ணிற தாடி விளங்கிட இருப்பாய்
மான்தோல் மீது காலை மடித்து
யோக நிலையிலே நீயிருப்பாயே

மயிலாடுதுறையில் நந்தியின் மீது
அமர்ந்த நிலையிலே தரிசனம் தருவாய்
திருவிடைமருதூர் ஆலயம் தன்னில்
உமையவளுடனே அருள்புரிவாயே

திருவையாற்றில் உன்திருவடியில்
ஆமை இருக்க அதிசயம் கண்டோம்
வலக்கரம் தனிலே கபாலம் ஏந்தி
தரிசனம் வழங்க ஆனந்தம் கொண்டோம்

சங்கரங்கோயில் ஆலயம் தனிலே
மிருதங்கம் ஏந்திய நிலையினில் கண்டோம்
அகரம் தலத்தில் கங்கையை சிரசில்
ஏந்திய தோற்றம் புண்ணியம் என்போம்

கயிலையில் ஒருநாள் உமையுடன் நீயும்
களிப்புடன் இருக்கும் வேளையின்போது
அன்னப்பறவை இடையினில் பறந்து
சினம்வரும்படியாய் செய்தது உன்னை

அரமன் உந்தன் கோபத்தினாலே
அன்னப்பறவை மண்ணில் பிறந்து
அன்னதான தக்ஷிணாமூர்த்தியின்
திருவருளாலே குறை நீங்கியதே

குருவின் பார்வை தரும் பல நன்மை
அடியவர் வாழ்வில் இதுவே உணமை
குருவே உந்தன் மனமோ மென்மை
உனக்கொரு ஈடு இணையே இல்லை

தொழிலும் கலையும் தழைத்தே வளர
தொழுதிடுவோமே குரு பகவானே
அழிவில்லாத அருளைத் தந்து
அகிலம் த்ன்னை காப்பவன் நீயே

ஆலங்குடியில் அருளும் குருவே
ஆறு கால அபிஷேகம் உனக்கு
மீனாக்ஷியம்மன் ஆலயம் தனிலே
சங்குடன் சக்கரம் தரித்து நின்றாயே

குச்சனூர் தனிலே யானையில் அமர்ந்த
ராஜயோக மூர்த்தியும் நீயே
மெச்சிடும்படியாய் பல்வேறு வடிவில்
மேதினி வியக்க அருள்கின்றாயே

தைப்பூச நாளில் உந்தனை பணிந்தால்
தடை பல விலகும் நினைத்தது பலிக்கும்
வையகம் செழிக்க வரம் தருவோனே
வண்ங்கிடுவோமே உனையே குருவே

நெய்தீபமேற்றி கும்பிட எங்கள்
நெஞ்சம் மகிழும் பஞ்சம் அகலும்
ஐயம் தீர்க்கும் ஆசான் நீயே
அன்பரை என்றும் காத்திடு குருவே

அல்லிமலரால் உன்னை பணிவோம்
செல்வம் பெருகிட அருளிட வேண்டும்
வாடாமல்லி பூவால் உன்னை
வணங்கிட எமபயம் நீக்கிடுவாயே

மல்லிகைப்பூவால் வணங்கிடும் போது
மனதில் அமைதி வழங்கிடு குருவே
சம்பங்கி பூவால் உன்னை தொழுதால்
இருப்பிடம் மாற்றி நீயருள்வாயே

காசாம்பூவால் கழலடி வணங்க
அற்புதம் நிகழும் அகமே மகிழும்
ஆவாரம்பூவால் குரு உனை பணிந்தால்
நினைவின் ஆற்றல் நித்தம் பெருகும்

நாகலிங்கப்பூவால் உன்னை
நாளும் நாளும் பூஜிப்போமே
லக்ஷ்மி கடாட்சம் உடல்நலம் தந்து
எங்களை நீயும் உயரவைப்பாயே

எத்தனை பூவால் பணிந்தால் என்ன
உந்தன் பெருமையை நானென்ன சொல்ல
சித்தம் முழுதும் நித்தம் பூக்கும்
அன்பு ஒன்றே உன் வசமாகும்

ஞான தக்ஷிணாமூர்த்தி போற்றி
யோக தக்ஷிணாமூர்த்தி போற்றி
வீணா தக்ஷிணாமூர்த்தி போற்றி
கெளரி தக்ஷிணாமூர்த்தி போற்றி

ஆதி தக்ஷிணாமூர்த்தி போற்றி
அருளும் தக்ஷிணாமூர்த்தி போற்றி
ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி போற்றி
சிவசிவ தக்ஷிணாமூர்த்தி போற்றி

சரணம் சரணம் குருவே சரணம்
கவசம் போலே காப்பாய் சரணம்
அருள்மழை நீயே அய்யா சரணம்
அபயம் அபயம் தருவாய் சரணம்

Comments