ஐயப்பன் கவசம் | Ayyappan Kavasam

ஐயப்பன் கவசம்



அரிஹர புத்தரனை, ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை, அறுமுகன் தம்பியை
சபரி கிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம்தினம் போற்றிப் பணிந்திடு வோமே
ஐயப்ப தேவன் கவச மிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம்தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே.

மண்ணுல கெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக

புலிவாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக

பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக

வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவினை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினெண்படியை மனதில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்ப சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே

சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள்தூ ளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே.

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்.

சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

சிவனார் மகன்என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன் நாசியைக் காக்க

இருமூர்த்தி மைந்தன்என் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க

கலியுக வரதன்என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பிஎன் குரல்வளை காக்க
புஷ்க்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க

வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் கைகளைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க

முழுமுதற் கடவுள் என் முதுகினைக் காக்க
இருமுடிப் பிரியன் என் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசாஸ்தா என் தொடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதிஎன் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமாரன் விரல்களைக் காக்க

அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
அரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க

அரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள் தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க

காக்ககாக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க என் பாவம் பொடிபட
இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க

கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலை தன்னைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்

பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர்சொல் லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம், சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும், வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணு காமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா

கல்வியும், செல்வமும், கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா

காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்
என்றுமே என்னை அணுக விடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்

சூது, பொறாமை பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம், துன்மார்க்க மல்லாமல்
வேத நெறியினை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்

மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தெனை வாட்டி வதைசெய் யாமல்
உள்ளன் புடனே உன்திரு நாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

அரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐங்காரன் சோதரா ஐயப்பா நமோ நமோ

பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
கரிகா யுதமுடைச் சுந்தரா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ

சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

(பிரம்மாண்ட புராணத்தில் கேரளீய மஹாத்மியத்தில் ஸ்ரீ பரசுராமரால் ஐயப்பனைத் துதிக்கப்பட்ட கவசம்.)

Comments